Sunday, October 21, 2012

ஆண்டவனுக்கே அல்வா........!


                                ஆண்டவனுக்கே அல்வா…………..!
             ----------------------------------------------------


அவகாசம் வேண்டும் ஆண்டவனே………..!
பிறவியேனும் பெரும்பிணியை நீக்கவல்ல
உன்பொன்டியை நான் வந்தடையும் நாளை
ஆதாவது என் மகன் எனக்கு
கொள்ளி வைத்து என் சாம்பலை அள்ளியெடுத்து
‘’  தொலைந்தான் துரோகியென ‘’
ஆற்றிலோ அல்லது கடலிலோ கரைக்கும் நாளை
சில ஆண்டுகளுக்கு தள்ளி வைத்தால்
நிலுவையெனும் பெருங்கடலில் தத்தளித்து
என் நிம்மதியைக் கெடுக்கும்
சில கடமைகளெனும் கப்பல்களை
கரைசேர்த்து விடுவேன் அய்யனே…

‘’அடேய்………….மனிதப் பதரே
என் படைப்பில்
நான் அறிந்தே செய்த தவறே…………!
உன் விருப்பத்திற்கு தள்ளிவைப்பதற்கும்
என் கடமைக்கு எதிராய் தடுத்து வைப்பதற்கும்
இது என்ன…….
ஐந்து  வல்லரசுகளின் ஆளுமையிலுள்ள
ஐ(அயோ)க்கிய நாடுகளின் சபையின்
‘’விட்டோ ‘’ அதிகாரம் என்றா நினைத்தாய்.
அல்லது குறை ஆண்மை காரணமாக
இறையாண்மையென்று மூடிமறைப்பதற்கு
இது என்ன முல்லிவாய்க்காலில் நடந்த
இனப்படுகொலையென்றா நினத்தாய் ‘’ என்று
ஐயன் என் மேல்
ஆத்திரம் கொள்வதை அறிவேன் நான்.





சின்னஞ் சிறு வயதிலேயே
நீ பரிசுத்தத்துடன் எனக்குக் கொடுத்த
புனிதமான இதயக் கூட்டில்
சிகிரெட் புகையை பத்திரப்படுத்தினேன்
அதன் விளைவு……………………!
இப்போதெல்லாம் சுவாசம் என்னோடு
அடிக்கடி சூதாட்டமாடுகிறது.

ஊட்டச்சத்து நிறைந்தது என
ஊடகங்களிலிருந்து நாடகங்கள் வரை
விளம்பரப்படுத்தப்பட்ட
கின்னஸ் ஸ்டௌட்டிலிருந்து
நாட்டுச் சரக்கான லாலான் தண்ணிவரையும்
அயல்நாட்டுச் சரக்கான ஓட்காவிலிருந்து
உள்நாட்டுச் சரக்கான ஓராங் துவா வரையும்
அனைத்தும் அறிவோம் யாம்.
அதன் பலன்……………..
ஈரல் இருக்க வேண்டிய இடத்தில்
அது இருந்த அடையாளத்திற்கான
ஒரு கீரல் மட்டும் இருப்பதாக
என்னை பரிசோதித்த மருத்துவர்கள்
மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.

(குறிப்பு :- லாலான் தண்ணி மற்றும் ஓராங் துவா என்பது
மாலேசியாவில் தயாராகும் ஒரு வகை சாராயத்தை
குறிக்கும் வார்த்தைகளாகும்.நாட்டுச் சரக்கு என்றும் சொல்லலாம்)

சூதும் வாதும் வேதனை செய்யாது
சாதனை செய்யும் என சபதம் செய்து
மூன்று இலக்க லாட்டரி கடலிலும்
நான்கு இலக்க நெம்பர் சமுத்திரத்திலும்
மூழ்கி முக்குளித்தேன்.
ஆனால் ஐயகோ………….!
நத்தை வயிற்றில் பிறந்த
முத்துக்களுக்கு பதில்
கூடைகூடையாக வெறும்
கூழாங்கற்களே கிடைத்தன இறைவா………!
ஆனாலும்…….விடா முயற்சி நிச்சயம்
வெற்றியைத் தரும் எனும் நம்பிக்கையோடு
‘’ டோட்டோ ‘’ எனும் போர்க்களத்தில்
வெற்றிக்கனிகளைத் தேடி
‘’ நேட்டோ ‘’ படையெனச் சீறிப்பாய்ந்து
மூர்க்கமாய் போர்தொடுத்தேன்.
ஆனாலும்……. ஐயகோ…… ஆண்டவனே …!
அங்கேயும் என் புறமுதுகு
புழுத்துப்போகுமளவிற்கு புண்பட்டு
வெற்றிக்கனிகளுக்கு பதில்
வெம்பிய கனிகளே கிடைத்தன இறைவா.
முப்பது வயதைக் கடந்துவிட்ட
என் மூத்த மகன்
அமிதாப்பச்சனுக்கு மருமகளாகிப் போன
ஐஸ்வரியாராயைப் போன்ற
அழகியைத்தான் அடைவேனென்று
அடம்பிடிக்கிறான்.
திருமணத்திற்காக காத்திருக்கும் என்னுடைய
மூன்று திருநிறை செல்விகளுக்கு
ஏற்ற திருநிறை செல்வர்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
இதுவரை வந்து போன வரன்களெல்லாம்
என்னுடைய கருப்புத்தான்
என் மகள்களுடைய கறுந்தோலுக்குப்
பொறுப்பு என்று கூறி நிராகரித்துவிட்டார்கள்.

‘’ கருப்புதானே தமிழச்சியோட கலரு ‘’ என்று நான்
இனமான உணர்வோடு எடுத்தியம்பினால்
‘’ சினேகா போல சிவப்புதான்
எனக்கு பிடிச்ச கலரு ‘’ என
எதிர்பாட்டு பாடுகிறார்கள் அய்யனே……!

ஏற்கெனவே சதி செய்து கொண்டிருந்த
சாதிவெறியோடு இப்போது
இந்தத் தார் நிறத்துக் கருப்பர்களின்
நிறவெறியும் சேர்ந்து கொண்டு
என்னைப்போன்ற அப்பாக்களை
அல்லல்படுத்துகிறது ஆண்டவனே….!

ஆகவே… ஆண்டவனே………
அகிலத்தின் நாயகனே
ஆபத்பாந்தவனே
என்னைப்போன்ற அநாதைகளின் இரட்சகனே,
உனையன்றி ஓர் அணுவும் அசையாது
உன்னை விட்டால் எனக்கு வேறு திசையேது.

ஆகவே……………
அருள்கூர்ந்து ஆண்டவன்
இன்னும் சில ஆண்டுகளுக்கு
என் ஆயுளை அகலப்படுத்தினால்
நிலுவையாக எனக்கு முன்னால் நின்று
என்னைக் கழுவிலேற்றக் காத்திருக்கும் அந்த
தொடக்கூடாது என்று தெரிந்திருந்தும்
திமிரோடு தொட்டுவிட்ட குறைகளையும்
விட்டுவிடக் கூடாது என்ற விபரம் புரிந்திருந்தும்
விட்டு விட்ட நிறைகளையும்
கட்டங்கட்டமாக ஐந்தாண்டுத் திட்டங்களாக
இருபது அறுபதுக்குள் நிறைவேற்றி
தன்யனாவேன் தயாநிதியே……..



                                                                      


No comments:

Post a Comment