Sunday, October 14, 2012

திருந்துவோம்.....! திருத்துவோம்....!

திருந்துவோம்………….!திருத்துவோம்…………!!
--------------------------------------------------------------------------



பொய்யும் புரட்டும் வேதமாய் ஆனபின்
புரட்சி எப்படி நிகழும் – அறிவு
வரட்சி எப்படி தணியும்
வெய்யர்தம் தலைமையில் நம்மினம் நின்றால்
அரசியல் எப்படி சிறக்கும் – நமக்குள்
ஆற்றல் எப்படி பிறக்கும்.

பணமே இங்கு மனமாய் இருக்கையில்
பண்பு எப்படி பெருகும் – நமக்குள்
அன்பு எப்படி உருகும்.
பிணமாய் இனமே ஆன பின்னாலே
பெருமை எப்படி விளையும் – நம்
வறுமை எப்படி ஒழியும்.

இனமே சாதியில் மூழ்கிக் கிடக்கையில்
ஒற்றுமை எப்படி விளையும் – நம்மினம்
உரிமையை எப்படி அடையும்
குணமே குப்பையாய் ஆன பின்னாலே
குறள்நெறி எங்ஙனம் பரவும் – நற்
கொள்கைகள் எப்படி மருவும்.

குடியும் மடியும் இனத்தை ஆண்டால்
கூடிப் பெருகும் துயரம் – தமிழ்க்
குடிதான் எப்படி உயரும்.
அடிதடி வம்பு வன்முறை வாழ்வெனில்
அடுத்த தலைமுறை கவிழும் – நாட்டில்
நம்மின பெருமை  அவிழும்.



No comments:

Post a Comment