இதிகாசச் சதியும் இக்கால விதியும்
நாங்கள்
கடலைக் கடைந்தோம்
அமிர்தத்தை அபகரித்துக் கொண்டு
எங்களுக்கு
ஆலகால விஷத்தை மட்டும் கொடுத்தார்கள்.
பாலங்கள் அமைக்க நாங்கள்
பாறைகள் சுமந்தோம்
ஆனாலும்………………..
அவர்களால் நாங்கள்
வானரங்கள் என்று
வர்ணிக்கப்பட்டோம்
சத்ரியர்களுக்கு மட்டுமே
சகல வித்தைகளும் என்றார்கள்
அதனால்
வில்லாக நாங்களே வளைந்து
நம்பிக்கையோடு நாணேற்றினோம்
அதற்காக
அவர்கள் எங்களின்
விரல்களைப் பிடுங்கிக் கொண்டார்கள்.
சமயம் வாய்க்கும் போதெல்லாம்
பிரகலாதர்களின் கொம்புகளை
கூர்மையாகச் சீவி விட்டார்கள்
வளர்த்த கிடாக்களாக
மார்பில் பாய்வதற்கு.
No comments:
Post a Comment