Tuesday, February 15, 2011

சமுதாயச் சுரண்டலை நிறுத்துவோம்

போட்டிப் பொறாமைகளால் ஈட்டிகள் தீட்டினோம்
இழைத்தோம் இனத்திற்கு ஊறு –அதுவாரி
இறைத்தது இனத்தின்மேல் சேறு
ஊட்டி வளர்த்திங்கு உறவைப் பெருக்குகின்ற
மற்றவரின் இனஉணர்வைப் பாரு – அதை
பார்த்தாவது உன்நிலையில் தேறு.

வீழ்ச்சியை விரக்தியை இனத்தின் தோல்வியை
சூழ்ச்சியின் துணைகொண்டு மறைத்தோம் – மேல்
கீழென இனத்தையே சிதைத்தோம்
ஏழ்மையை இழப்பினை இனத்தின் விதியென
தாழ்வுமனப் பான்மையால் களைத்தோம் – நம்
வீழ்ச்சிக்கு சிதைநாமே வளர்த்தோம்.

தனிமனித வழிபாடு எட்டப்பக்குணக்கேடு
தந்திடும் இனத்திற்குப் பெருங்கேடு – இவை
தகர்த்தெறிய வேண்டிய குறைபாடு
அணிசேர்த்து இனத்திற்குள் அடிமைகளை உருவாக்கும்
அரசியல் வித்தைக்குத் தடைபோடு – அன்னைத்
தமிழோடு இனம்வாழ நடைபோடு.     

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் என்னும்
குறள்நெறியை இளையயோர்க்கு ஊட்டுவோம் – நம்
குடிஉயர திருக்குறளை புகட்டுவோம்
பல்லினம் வாழும் இம்மலை நாட்டில்
பரிசுத்த மனிதத்தை போற்றுவோம் – நம்
உரிமைக்கு இனவுணர்வைக் கூட்டுவோம்.

அடிதடி வம்பு வழக்கினை நிறுத்துவோம்
அண்ணன் தம்பியாய் ஒன்றிணைவோம் –நம்
கோயில்களை அறிவகமாய் மாற்றுவோம்
குடியைக் கெடுக்கும் குடியை ஒழிப்போம்
குடும்பத்தை பல்கலைக் கழகமாக்குவோம் –நல்ல
அறிஞர்கள் தலைமையில் அணிவகுப்போம்.

குற்றங் குறைகளைக் கோணலைத் திருத்துவோம்
குமுகாயக் கூனலை நிமிர்த்துவோம் – நம்
சமுதாயச் சுரண்டலை நிறுத்துவோம்
உற்றார் உறவின ராகஇன் நாட்டில்நாம்
அயராது உயர்வுக்கு ஒன்றிணைவோம் – நாம்
ஒற்றுமையாய் வாழ்வதற்கே உறுதிகொள்வோம்.

No comments:

Post a Comment