Tuesday, February 15, 2011

தொட்டாச்சிணுங்கியாய் இரு

மறுவாகத் தாழ்வுமனப் பான்மை உந்தன்
மனத்தினிலே உருவானால் உயர்வு இல்லை
பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லை என்னும்
பேருண்மை புரிந்தோர்க்கு வானமே எல்லை
உறுதியுடன் முயன்றிட்டால் உன்னால் முடியும்
ஒளியிழந்த இருண்டஉன்கீழ் வானம் விடியும்
வருமானம் உன்வீட்டின் வாசல் தட்டாது
வறுமையென வாடிநின்றால் வளமை கிட்டாது

ஏமாளித் தனமாக வாழ்ந்து விட்டு
எடுப்பார்கைப் பிள்ளையாக இருந்து விட்டு
கோமாளி யானேனே கூறு கெட்ட
குருமுட்டை யானெனெ என்றே ஏங்கும்
காமாலைக் கண்ணாஉன் கருத்தை மாற்று
காசுபணம் சொத்துசுகம் உன்னைத் தேற்றும்
சீமானே கோமானே என்றே உலகம்
பூமாலைப் போட்டுஉனைப் புவியில் போற்றும்.

தொட்டாச்சிணுங் கியைப்போன்று தன்மா னத்தை
தொட்டவுடன் துடித்துணரும் தன்மை வேண்டும்
பட்டென்று வெடிக்கின்ற பட்டா சைப்போல்
பழிவந்தால் அதைத்தீர்க்கத் துடிக்க வேண்டும்
கொட்டக்கொட் டக்குனிந்தது போதும் கொண்ட
கொள்கையிலே இனவுணர்வு வேண்டும் எதிலும்
வெட்டொன்று துண்டிரெண்டு என்றே முடிவில்
விதியமைத்துக் காரியங்கள் முடிக்க வேண்டும்.

தோல்விகளுன் வாழ்வில்தினம் தொடர்ந்து வந்து
தொகைதொகையாய்த் துயரத்தைத் தந்த போதும்
வேள்விகளென் றெண்ணிமனம் துவண்டி டாமல்
வென்றிடுவேன் எனமுழக்கம் செய்வாய்; பிறவியின்
ஊழ்வினையே யானாலும் உறுதி கொண்ட
உள்ளத்தின் உழைப்பாலே உலகை வென்று
வாழ்க்கையெனும் போரினிலே வாகை சூடி
வள்ளுவனின் குறளைப்போல் நிலைக்க வேண்டும்.

No comments:

Post a Comment