Sunday, November 25, 2012

ஐயா.... நான் சொல்வதெல்லாம் பொய்யா


                             ஐயா……….நான் சொல்றதெல்லாம் பொய்யா……..?

காடழிச்சி தோட்டம்போட்டு நாடுபூரா ரோடுபோட்டு
கருத்தோடு வாழலய்யே ஐயா – நாட்டில்
திட்டம்போட்டு வட்டம்போட்டு கொட்டகொட்ட குனிஞ்சதாலே
குட்டிச்சுவரா போயிட்டான்னா பொய்யா ?

அந்த நாயைப் பாத்தாக்கா இந்தநாயி உறுமுமே
அதைபோல பாக்குரானே ஐயா – இவன்
அடுத்தவனப் பாத்தாக்கா ஆய்……..பிரதர் எனச்சொல்லி
அஞ்சிவால சுருட்டுரான்னா பொய்யா ?

ஒற்றுமையே பலமுன்னு மத்தவங்க புரிஞ்சிகிட்டு
ஒன்னுசேர நெனைக்கிராங்க ஐயா – இவன்
செத்துபோன சாதிக்கு சங்கங்கட்சி தொறந்துவெச்சி
அடிச்சிகிட்டு சாகிரான்னா பொய்யா ?

அணிஅணின்னு பிரிஞ்சிபோயி அநியாயமா கெட்டுப்போயி
அஞ்சடியில் வாழுறானே ஐயா – இவன்
அநியாயக் காரனுக்கு ஆளுயர மாலைப்போட்டு
அவன் எச்சியை நக்குறான்னா பொய்யா ?

சமுதாய சேவையின்னு  இயக்கங்கள அமைச்சிவெச்சி
சண்டைவம்பு போட்டுக்கிறானே ஐயா – இவன்
அமுதான தாய்மொழிக்கு அதிர்வேட்டு வெச்சிபுட்டு
அரிச்சந்ர னாகுறான்னா பொய்யா ?

நம்பபுள்ள பொண்டாட்டி நல்லா இருக்குணோன்னா
நமக்குஇவன் வம்புவழக்கு ஏய்யா – இந்த
கொம்பனுங்க கொழுப்படங்க காலம் வெகுதூரமில்லே
காசுபண்ணும் வழிபாப்போம் வாய்யா.

No comments:

Post a Comment