Monday, February 13, 2012

தியானம்




        தியானம்

என்னைப் படைத்ததற்கான
இயற்கையன்னையின் நோக்கம்
‘அறம்’
மனிதன் எனக்கு
சூட்டியிருக்கும் பெயர்
உணர்ச்சியில்லா ‘மரம்’

நான் இயற்கையன்னையின்
ஆசீர்வதிக்கும் கை

விதையாய் இருந்தபோது
நானிட்ட பத்மாசனம்
வீழும்வரை அதுவே என்
சிம்மாசனம்


என் இலைகளைத் தின்றுதான்
ஓசோன் சிலந்தி
உயிர்வாழ்கிறது.

சித்தார்த்தன் என்ற மனிதன்
என் நிழலைத் தேடிவந்தான்
புத்தனாவதற்கு

வண்டுகள்
என் மகரந்தங்களை கவர்ந்தன.
பறவைகள்
இனப்பெருக்கம் செய்தபின்
என்னைக் குப்பைத்தொட்டியாக்கிவிட்டு
பறந்து போயின.
பூச்சிகள்
இரவும் பகலும்
ஓயாமல் என்னோடு பேசின
என் மௌனமொழி புரியாத
அந்த அப்பாவிப் பூச்சிகள்
கோபமுற்று
சமயத்தில் என்னை ஏசின.
மனிதர்களின் மூதாதையர்கள்
என்பதாலோ.....என்னவோ....!
என் கனிகளைத் தின்றுவிட்டு
குரங்குகள் என்மீதமர்ந்து
கூத்தாடின.

சிரசாசனம் செய்தபடி
யோகநித்திரையில் ஆழ்ந்துபோகும்
வௌவால்களுக்கும்
கண்களை உருட்டியவாறு
நித்தியமும்
நிட்டையில் மூழ்கிவிடும்
பறவைச் சித்தர்களான
கோட்டான்களுக்கும்
நான் குருசேத்திரமாவேன்.


மரங்கொத்திகள்
என் அகத்திலும் புறத்திலும் உள்ள
முதுகெழும்பில்லா
புழுக்களை மட்டும் அகற்றி
நான் நானாக இருக்கும்படியாக
என்னை பரிசுத்தப்படுத்தும்
தீவிரவாதம் இல்லாத
தீர்க்கதரிசிகள்.

அவைகள் எங்களுக்கான
அலகு தேர்ந்த
அறுவை சிகிச்சை நிபுணர்கள்.

இந்தப் புள்ளினங்கள்
எங்களின் இனவிருத்திக்கான
விதைகளை சுமக்கும்
வாடகைத் தாய்மார்கள்.


என் கிளைகளிலிருந்து
உதிர்ந்து பறக்கும் அந்த
சிறகுகள் முளைத்த பூக்கள்
பூமியெங்கும் எச்சமிட்டு
எங்களின் எண்ணிக்கையை மட்டுமல்லாது
தங்களுக்கான புண்ணியத்தலங்களையும்
பெருக்கிய பெருமையோடு
அப்பறவைகள் எங்களின் உறவுகளாக
என் கிளைவந்தடைகின்றன.

ஆனால் மனிதனோ..........!
என் எதிர்கால சொத்துக்களான
வித்துக்களை
தன் வீட்டுச் சமையலறையின்
அடுப்பிலே சுட்டு
இரசாயனம் நிரம்பிய
அவனின் வயிற்றிலே இட்டு
தன் நவீன கழிவறையின்
மலச் சட்டியிலே விட்டு
அலம்பிவிடுகிறான்.
எங்களின் வருங்கால சந்ததிகளை
அழித்து விடுகிறான்.

இப்படித்தான்...........
உலகத்தில் வாழ்ந்த பல உயிரினங்களை
மனிதன்
விளையாட்டு எனும் பேரில்
வேட்டையாடிக் கொன்றுவிட்டான்
இன்னும் பலவற்றை
பாவம் புண்ணியம் புனிதம் என்றும்
மதம் வேதம் வெங்காயமென்றும்
கதறிக் கண்ணீர் விட்டுக் கொண்டே
சுட்டுத் தின்று விட்டான்.

நிலம்வாழ் பச்சை முகிலாள் என்று
எனக்கு மற்றொரு பெயருண்டு
கார்மேகம் என்பவன்
என் காதலன்
காலம் கனியும் போதெல்லாம்
என்னொடு அவன் கூட வருவான்
நாங்கள் காதல் செய்வோம்
அப்போது நாங்கள்
ஒன்றினையும் போகத்தின் உச்சகட்டத்தில்
இட்டுக்கொள்ளும் முத்தங்களின் தெறித்த
எச்சில் துமிகளைத்தான்
மனிதன்
மழை என்கிறான்.

பூகோளத்தின் திருக்கோலத்தை
அழித்து அலங்கோலப்படுத்த
கழிவுகளிலிருந்து உருவெடுத்த
கரியமிலவாயுவெனும் ஆலகால விஷத்தை
ஆயுதமாக ஏந்தி
அனுதினமும் போர்தொடுக்கும்
சாகாவரம் பெற்ற சாத்தானை
ஓயாமல் விழுங்கும்
பச்சையப் பூதம் நான்.

பூதலத்தின் வளிமண்டலக் கடலை
சதா கடைந்து கொண்டிருக்கும்
மரமத்து நான்.



அதில் பொங்கியெழும்
ஜட பிராணவாயுக்களின்
கலவையான அமிர்தத்தை
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
பாராபட்சமில்லாமல் பகிர்ந்து வழங்கும்
அமுத சுரபி நான்.

நானிலத்தைப் பேணிக் காப்பதற்காக
இயற்கையன்னை தன் கையிலேந்தியிருக்கும்
அட்சய பாத்திரம் நான்.

ஆனால்............!
லோகாயதவாத நோய் பீடித்த
மனிதன்...........
என்னைத் தன் பிச்சைப்பாத்திரமாக்கினான்.
தேக்கு சந்தனம் என்றும்
தரமான சரக்கு என்றும்
எங்களை எச்சில் பாத்திரமாக்கினான்.

எங்களின் எதிர்கால விருத்திக்கான
வித்துக்களின் கருவறையான
காய்களையும் கனிகளையும்
சுமக்கும் காலங்களில்
இவர்களின் கல்லடிகள் பட்டு
காயப்பட்பட்டிருக்கிறோம்.
முற்றிலும் சூறையாடப்பட்டு
மூளிகளாக்கப்பட்டிருக்கிறோம்.

எங்களின் கனிகளிலிருந்து
சாற்றைப் பிழிந்தும்
எங்களின் இளமைக்கும் வளமைக்கும்
மூலாதாரமான குருத்துக்களின்
குருதியைக் கரந்தும்
மது செய்கிறான்
மனிதன் தன் மாண்புக்கு எதிரான
விதி செய்கிறான்.

வெட்டிச் சிதைத்துக் கொண்டிருப்பது
எங்களின் அடிமரத்தையல்ல
அவனுடைய எதிர்காலச் சந்ததிகளின்
அடித்தளத்தை என்பதை
அறியாதவனாய் இருக்கிறான் மனிதன்.
அவனுக்கு எதிரான
இயற்கையின் சீற்றத்தை
சீதோஷ்ண நிலையின் குற்றம் என்றும்
சூழியல் ஆபத்தை
சுற்றுச் சூழலின் மாற்றம் என்றும்
மழுப்புகிறான் மனிதன்.

வசந்த காலம் ..............
அது நான் வஞ்சிக்கப்படும் காலம்
அது என் வருத்தம்.........!

பூவும் பிஞ்சுமாய் பூத்துக் குழுங்கி
நான் ஆடும் நடனத்திற்கு
பொருத்தமில்லா விருத்தம்.

இலையுதிர் காலம்..........
என்னில் இயற்கை செய்யும்
திருத்தம்.........!

அது...........
எல்லாம் உதிர்த்து
நான் வெறும்கட்டையாய் நிற்கும்
யோக நிட்டை.

என் அந்த வெறும் கோலம்
நான் சும்மா இருக்கும் காலம்
என் நிம்மதியான நிகழ்காலம்.

அது.............
முற்றும் துறந்த நிலையிலான
என் ஒற்றைக் கால் தவம்.

சப்தமில்லாமல் இந்தப் பூமியின்
கடைசி மரம் விழும்போது
கலியுகம் முடியும்..........!
அதன்பின்..........

இப்புவனத்தில் மனிதனில்லாத
புது யுகம் விடியும்.