Friday, April 1, 2011

ரு தோட்டப்புறக் குயிலின் சோக கீதம்

(யாப்பிலக்கணம் எனக்கு முழுமையாக அறிமுகமில்லாத காலம். வெறும் கேள்வி ஞானத்தின் துணையோடு தப்பும் தவறுமாக நான் எழுதிய என் முதல் கவிதை. நான் பெற்ற என் முதல் குழந்தை. மதிப்பிற்குரிய புலவர்களே தயை கூர்ந்து அந்த குழந்தையின் மழலை மொழியில் சொற்குற்றமோ இலக்கணக் குற்றமோ காணாதீர்கள். மன்னித்தருளுங்கள்.)


சாமக்கோழி கூவுமுன்னே கண்வி ழித்து
தரித்திரத்தை உணவாக சமைத்து வைத்து
சாமக்காரன் குரலுக்கு பதில ளித்து
தவறாமல் பெரட்டினிலே பெயர்கொ டுத்து
நாமணக்க மகவுகளை அணைத்துக் கொஞ்சி
நாற்றமிகு ஆயாக்கொட் டகையில் விட்டு
தாமதமின் றிரப்பர்மரக் காடு நோக்கி
சஞ்சலத்துடன் விடிவதற்குள் ஓட வேண்டும்.

பன்றிகளும் பாம்புகளும் வாழும் காட்டில்
படிகள்கொண் டஏணிதனை தூக்கிக் கொண்டு
பன்னிரண்டு அடிகளுக்கும் உயரே உள்ள
பால்வெட்டுக் கோடுகளை சீவி எந்தன்
கண்களிலே வடிகின்ற கண்ணீ ரைப்போல்
கசிந்துருகும் நொய்வப்பால் சேக ரித்து
ஊணுடம்பு நோகிடவே சுமந்து என்னை
உருக்குலைக்கும் பணிதன்னை முடிக்க வேண்டும்.

நிரையினிலே குறையேதும் இருந்து விட்டால்
துரைமுன்னே நடுநடுங்கி நிற்க வேண்டும்
குறைகண்ட கிராணியாரின் கூவ லுக்கு
குலைநடுங்கி குறுகித்தான் குனிய வேண்டும்
புரையோடிய புண்வாழும் புழுவைப் போல
பொய்யான பிழைப்பிற்கு உழைக்க வேண்டும்
கரைதனிலே வீழ்ந்துவிட்ட மீனைப் போல
கலங்கித்தான் தினம்நானும் சாக வேண்டும்.

காட்டோடு தீராது எந்தன் தொல்லை
கணவனெனும் குடிகாரன் தினமும் என்னை
வாட்டிடுவான் வதைத்திடுவான் வம்பு பேசி
மக்களையும் மிதித்திடுவான், கேடு தரும்
சீட்டாட்டம் ஆடிடுவான், பாடு பட்ட
சில்லரைகள் அத்தனையும் தீர்த்தொ ழிப்பான்
கூட்டினிலே சிறைபட்ட பறவை யாக
கொடுமையிலே வாழ்கின்றேன் என்ன செய்வேன்.

நிம்மதியாய் படுத்துறங்க படுக்கை யில்லை
நினைவறிந்து வயிறாற உண்ட தில்லை
அம்மணமாய் அலையுமெந்தன் குழந்தை கட்கு
அணிவதற்கு நல்லஆடை ஏது மில்லை
நம்பிவந்த கணவனெனும் பாவி யாலே
நலமேதும் எனக்கிங்கு வாய்க்க வில்லை
இம்மையிலே எனக்கிந்த தொல்லை தீர
எமனான ‘’பாராகுவாட்’’ தானோ எல்லை….!

(பாராகுவாட் = கொடிய களைக்கொல்லி விஷம் )