Tuesday, March 8, 2011

துவா உன் பண்பாடு………….?


தமிழன் ஒருவன் செத்துக் கிடக்கிறான்
தாலி அறுத்தவள் நொந்து தவிக்கிறாள்
     அங்கு எதற்கடா சூதாட்டம்
      தின்னும் தீனிக்கேன் போராட்டம்.

உன்னவன் பிணமாய் ஓய்ந்து கிடக்கிறான்
உடன்பிறந்தவன் அழுது துடிக்கிறான்
       உற்றவன் வைப்பது ஒப்பாரி
        உனக்கேன் அங்கு கச்சேரி.

இனத்தைச் சேர்ந்தவன் இறந்து கிடக்கிறான்
இறந்தவன் மக்கள் இடிந்து கிடக்கிறார்
         ஏனங்கு உனக்குக் கும்மாளம்
          எடுத்ததற் கெல்லாம் நோப்பாளம்

நம்மவன் வீட்டில் இழவு விழுந்தது
அன்னவன் குடும்பம் அழுது புலம்புது
           அங்குமா உனக்கு அரசியல்
            அடித்துக் கொள்ளும் உரசியல்

மலேசியத் தமிழன் மாண்டு கிடக்கிறான்
மற்ற இனத்தவன் மரியாதை செய்கிறான்
           மதுவுடன் கூடுமுன் கூட்டம்
            மாண்பா அங்குச் சீட்டாட்டம்

அஞ்சலி செலுத்த வேண்டிய வேளையில்
ஐந்தடியில் கூடி அட்டூழியம் செய்கிறாய்
             என்னே உனது அறிவீனம்
              இல்லையா உனக்கு தன்மானம்.

No comments:

Post a Comment