Friday, March 11, 2011

மதங்கொண்ட மனிதர்கள்


எல்லோருக்கும் பொதுவான இறைவன் பெயரால்
இதயமற்றோர் இயக்குகின்ற மதக்கல வரங்கள்
வள்ளலவன் அருளாலே வந்து தித்த
மாந்தர்களுக் கெதிரான இனப்படு கொலைகள்
சொல்லொண்ணாக் கொடுமைகளை இழைத்தே உலகை
சூறையாடும் கொடியோரே ஒன்றை உணர்வீர்
செல்லாத உயிர்களென நினைத்தி ருந்தால்
செகத்திலவன் பல்லினத்தைப் படைத்திருப் பானா….?

அல்லாவின் அருட்புதல்வர் அன்னல் நபியும்
அன்னைமேரி ஈன்றெடுத்த தேவ மகனும்
எல்லாஉயி ரினங்களையும் அன்பால் வென்று
இரட்சிக்க வேண்டுமென்ற புத்த பிரானும்
தொல்லுலகைக் காப்பதர்க்கு தூதர் களாக
தோன்றியநற் சித்தர்களும் தீவிர வாதம்
நல்லதென்று சொல்லவில்லை இருந்தும் கெட்ட
நாசகாரப் பேய்களுக்கே னிந்த பேதம்.

இறைவன்திருப் பாதத்தைத் தொழுதிடும் கைகள்
ஏந்துவதோ கொலைக்கருவி; இறைவன் புனித
மறையோதும் நாவினிலே நஞ்செ தற்கு
மானுடத்தின் மாண்பதனைக் கொல்வ தற்கா!
இரைதேடும் கழுகைப்போல் இரக்க மின்றி
எளியோரை வதைக்கின்றீர்; பாழாய்ப் போன
முறைகெட்ட கொள்கைக்காய் இயற்கை கொண்ட
மூலத்தை அழிக்கின்றீர் முறையா சொல்வீர். 

தீவிரவா தப்போக்கால் பைத்தியம் பிடித்தோர்
தெளிவடைய வையத்தில் வைத்தியம் இல்லை
ஈவிரக்க மில்லாதார் நெஞ்சம் தன்னில்
இறையருளும் நிச்சயமாய் சுரப்ப தில்லை
தீவினையில் உழன்றோர்கள் எவரும் உலகில்
சிறப்போடு வாழ்ந்ததாக வரலா ரில்லை
பாவிகளை இறைவனவன் இரட்சித் ததாக
பாரிலுள்ள எம்மதமும் சொல்ல வில்லை.

மதமென்றும் இனமென்றும் சமய மென்றும்
மறையென்றும் குறைதீர்க்கும் சடங்குக ளென்றும்
நிதமிங்கு மாந்தரிடை நிந்தனை வளர்த்தே
நீக்கமற நிறைந்திருக்கும் இறையின் புகழை
வதம்செய்யும் மனிதர்களே ஒருசொல் கேளீர்
மதவாதப் போதனையின் நோக்க மெல்லாம்
அதம்செய்தே ஆண்டவனை அடைய அல்ல
அறம்செய்தே மானுடத்தைக் காப்ப தற்கே.

No comments:

Post a Comment