Tuesday, March 8, 2011

அன்னை திரேசா


மனித நேயத்திற்கே மதம் என்பதேயன்றி
வேறொன்றும் அறியேன் பரமபிதாவே
என்று ஒலித்த
மாதா கோயில் மணியோசை

வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம் வாடி
அவற்றைத் தேற்றித் தேற்றியே
தேய்ந்து போன தெய்வம்.

மறுகன்னத்தில் அறைந்தும் திருப்தியுறாமல்
தொடர்ந்து முதுகில் குத்தியவர்களையும்
மன்னித்து நேசித்த மனித தேவதை.

அட்சய பாத்திரமில்லாமலேயே
அதிசயம் நிகழ்த்திய
மற்றொரு மணிமேகலை.

அன்பைத் தவிர
மண்ணுலகில் மற்றவற்றையெல்லாம்
மனிதகுல தொண்டிற்காக துறந்த
தூய பெண் துறவி.

வீதிச் சிலுவைகளில்
நாதியற்றுக் கிடந்த
சின்னச் சின்ன யேசுக்களின் நாசிகளில்
தன் உயிர்மூச்சை ஊதிவிட்டு
உயித்தெழச் செய்த
கருணைமிகுந்த கன்னித்தாய்

மனிதகுல ஒற்றுமைக்காக
ஒரு மந்திரம் சொன்ன
கனியன் பூங்குன்றனின்
கனிவான மனிதநேயக் கொள்கையை
கல்லடிகளையும் சொல்லடிகளையும் மீறி
கல்கத்தா வீதிகளில் கடைகள் விரித்து
விற்றுத் தீர்த்த வள்ளலாரின் பேத்தி.

கடமைக்காக. அழுதுவடியும்
அர்ப்பணிப்புக்குப் பெயர் போன
மெழுகுவர்த்தியும் துதித்து வணங்கும்
தூங்கா மணிவிளக்கு.

No comments:

Post a Comment